கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் – நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும்.
நேற்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் க.தொ.கூ.ச. கூட்டம் நடைபெற்றது.இதில் ஊறணியின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் ஆராயப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். எனவே ஆர்வமான – வழமையாக பங்குபற்றும் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு பங்கு பற்றி மேற்படி விடயங்கள் ஆராயப்பட்டன. முக்கியமாக மூன்று விடயங்கள் ஆராயப்பட்டன.
- ஊறணியில் வழங்கப்படும் வீட்டுத் திட்டம்.
- கடற்கரையோர வீதி அமைப்பு.
- கரையோர அணை கட்டுதல்.
இதில் முதலில் வீட்டுத் திட்டம் பற்றி ஆராய்ந்தபோது ஊறணிக்கு கிடைக்கவிருந்த -பிரதேச செயலகத்தால் பெயரிடப்பட்ட 7 வீட்டுப் பயனாளிகளில் இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக எமது பங்குத்தந்தை பிரதேச செயலரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதில் 1500 பேருக்கு கிடைக்கவிருந்த வீடுகளுக்குப் பதிலாக 500 வீடுகளே கிடைத்திருப்பதாகவும், இதனாலேயே 1000 பயனாளிகளின் பெயர்களை தாம் நீக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அடுத்த கட்டத்தில் நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறுமெனவும் பிரதேச செயலரால் தெரிவிக்கப்பட்டதாக எமது பங்குத்தந்தை தெரிவித்தார். எமது பிரதேச கிராம அலுவலரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊரிலிருந்து தமக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இருவரதும் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறார்களே என எமது தந்தை வினவியபோது அதை முற்றாக மறுத்த பிரதேச செயலர் குறைவான வீடுகள் கிடைத்ததாலேயே பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவித்தார் என்றார்.
அப்படியெனின் எமது கிராம செயலரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊரின் மேல் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாகத் தெரிகிறது. பொருத்தமான விளக்கங்கள் கொடுக்காமல் முறைப்பாடுகள் கிடைத்ததால்தான் இருவரதும் பெயர்கள் நீக்கப்பட்டதாக சிம்பிளாக காரணம் சொல்லி ஊரை கிளறி விடுவதாகத் தெரிகிறது என பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இருந்த போதிலும் வருகின்ற ஓரிரண்டு வீடுகளும் இன்னோரன்ன காரணங்களால் தவிர்க்கப்படாதிருப்பதற்காக க.தொ.சங்க முக்கிய உறுப்பினர்கள், Rds நிர்வாகிகள், அருட்பணிசபை முக்கிய உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சிலர் மீண்டும் அரச அதிபரை (G.A) சந்தித்து வீட்டுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடி அழுத்தம் கொடுப்பதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2.கடற்கரையோர வீதி அமைப்புத் தொடர்பாக ஆராய்ந்தபோது முதலில் எமக்கு இவ்வீதி அமைத்துத் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஒப்பமிட்டு ஓர் கோரிக்கையாகக் கொடுத்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கிணங்க உடனடியாகவே கோரிக்கை எழுதப்பட்டு ஒப்பமும் பெறப்பட்டது.
அத்துடன் கடற்கரை செல்லும் வீதிக்காக ஓடக் கரை ஊடாக ஓடையின் மேல் பாதை அமைத்து அதன் அருகாக வாய்க்கால் கட்டுவதென்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக எவரதும் காணிகளை அபகரிக்காமல் முதல் இருந்த ஓடைக்கு மேல் மண் கல் கொண்டு நிரவி பாதை மற்றும் வாய்க்கால் அமைப்பதென்று முடிவுறுத்தப்பட்டது. இதற்கு நிதி எவ்வாறு பெறுவது என்ற போது முதற்கட்டமாக க.தொ.கூ.சங்கத்தில் இருக்கும் ஒன்றரை இலட்சம் ரூபாவில் வேலையை ஆரம்பிப்பதாகவும் ஆர்வமுள்ள உறவுகள் கை கொடுக்கலாமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
உடனடியாகவே நாளை 12.02.2019 செவ்வாய்க்கிழமை ஓடையில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமாகின்றது. ( நாம் பாதைதான் போடுகின்றோம். அரசுதான் இதன் மேல் வீதி போடும்.)
- கடற்கரையோர அணை கட்டுதல். இது ஊரை பாதுகாக்கும் பாரிய திட்டமாகும். இது தற்போது கடற்கரை ஆரம்பத்தின் சுமார் 15 அல்லது 20 அடிக்கு முன்பாக (முன்பிருந்த கடற்கரையை ஓரளவு மீட்க முடியும்) கடலில் பாரிய கருங்கற்கள் போட்டு 6 அடி உயரத்தில் அணை போடப்படும் எனவும் இதற்காக 35 – 40 இலட்சங்கள் வரை செலவு ஏற்படும் எனவும் இதை தான் பொறுப்பெடுத்து ஒரு NGOவை பிடித்து செயற்படுத்த முயற்சி எடுக்கவுள்ளதாக சாந்தசீலனண்ணா தெரிவித்தார்.
அணைக்கட்டுக்கும் கடல் அணைக்கும் இடையே உள்ள 15 அல்லது 20 அடி அகல இடைவெளியை வேறு ஏதேனும் உதவி பெற்று நிரவி,இதற்கு மேலாகவே கடற்கரை வீதியை அமைக்கவும் முடியும் எனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.
உறவுகளே, வீட்டுத் திட்டம், வீதி அமைத்தல், அணை கட்டுதல் என மும்முனை செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே அனைவரும் கை கொடுத்து ஊரை காப்பாற்றி ஊரை வளமாக்குவோம்.