இயேசுவிற்கு 12 சீடர்கள்தான், ஆனால் நம் இறைபணியாளன்-ஊறணியின் ஊழியனுக்கு 15 சீடர்கள். இது ஒற்றுமையின் அடையாளம்-கீழ்ப்படிவின் அடையாளம்- தலைமைத்துவத்தின் அடையாளம்.
இந்த 74 வயது பணியாளன் நம் 15 பேர்களின் கால்களையும் ஒவ்வொரு தரமும் இருந்து பின் எழுந்து அவர்கள் இரண்டு கால்களையும் கழுவி பின் துணி கொண்டு துடைத்து…
இந்த திரு ஊழியன் சொல்கிறார்- ஒவ்வொரு ஊறணியின் மகனே, மகளே உங்கள் ஒவ்வொருவரின் கால்களையும் நான் கழுவத் தயாராயிருக்கிறேன்…
இது வெறும் உதட்டால் சொல்லப்பட்ட வார்த்தையல்ல. லண்டனில் வசதியாக வாழ்ந்த வாழ்க்கையைக் கைவிட்டு இதோ எம் நடுவே வெறும் Rds கட்டடத்தில்… இயற்கைக் கடன்களுக்கு பாடசாலை வளவை தேடிச் சென்று…தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஊறணியில் நடைபெறும் ஒவ்வொரு திருப்பலியும் ஒவ்வொரு நிஜமான கல்வாரிப் பலியாகவே எமக்கு அமைகிறது. நாம் என்ன தவம் செய்தோம் – இவ்வாறான ஓர் இறைபணியாளருடன் கூடவே வாழுவதற்கு.
ஊறணியின் மைந்தர்களே, 28 வருடங்களுக்கு முன்னர் எம் அருட்தந்தையின் காலத்தில் ஊறணியில் உலாவித்திரிந்தவர்களே நீங்கள் பேறு பெற்றவர்கள். இதோ அந்தப் பாக்கியம் இன்று எமக்கும் வாய்த்திருக்கிறது. பந்தியின் கடை நிலை ஊழியனாய் நாமும் இருக்கிறோமென்று நினைக்கும் போது பெருமிதமாக இருக்கிறது.
ஒவ்வொரு திருப்பலியின் போதும் அன்றைய நம் ஊறணியின் சேவையாளர்களை நினைத்து கண் கலங்குகிறார். நாமும் அவர் கூடவே கண்கள் சொரிகின்றோம். காணாமல்ப் போன தனது ஆடுகளைத் தேடிய இரட்சகன் போல அதே உருவில் எம் அருட்பணியாளனும்….
இணையாத கரங்கள் எங்கேனும் இருந்தால் அவைகளும் இணையட்டும். ஊறணிக்காய் மட்டுமல்ல, எம் இறைபணியாளனுக்காகவும் கரங்கள் இணைத்து தொண்டுகள் புரிவோம். ஊறணி மண் இனி ஒற்றுமையின் சின்னமாய் மாறட்டும்.