போர்த்துக்கல் நாட்டில்
லிஸ்பன் நகரத்து
பிரபுக்கள் குடும்பத்தில்
மாட்டின் புய்யோன்
தந்தைக்கும்
திரேசா – த- திவேரா
அன்னைக்கும் – மகனாக
பூமிக்கு வந்த
புத்திரன் பெயரே
பெர்டினன்ட்
அவன் வளர – அவனுடன்
அறிவும் வளர
தேடல்கள் விரிய
தேடக்கிடைத்த
பொக்கிஷம் போல
யேசு என்னும் – சீரிய
மனித இறைவனின்
வார்த்தை வாழ்க்கை முறைகளால்
ஈர்க்கப்பட்டு
FRIARS MINOR
சபையில் சேர்ந்து
அந்தோனியாக மாற்றம் கொண்டார்
உண்மை என்னும் வாள் ஏந்தி
உன்னதர் யேசு
வார்த்தைகளைக் கவசமாக்கி
எளிமை என்னும்
ஆடை அணிந்து
இறை நம்பிக்கை எனும்
வாகனத்தில்
யேசு எனும் வேதநாயகன்
விட்டுச் சென்ற பாதை வழி
அவர் பணிகளைத்
தொட்டுத் தூக்கி
தோளில் ஏற்றி
பல நாடுகள் அலைந்து
பட்டி தொட்டி எங்கும்
பரப்பலானார்
ஏழை இடத்து இறைவனையும்
இறைவன் இடத்து ஏழையையும்
இறுகப் பிணைத்தவர்
எங்கள் புனிதர்
எம்மத மக்களும்
சம்மதப்பட்டு
ஏற்றுவணங்கும்
மாண்புமிக்கவர்
அதனால் தான்
கண்டங்கள் தாண்டி
கறுப்பர் வெளுப்பர்
பேதங்கள் தாண்டி
உலகெல்லாம் அவர்க்கு
ஆலயமும்
ஆக்கப் பணிகளும்
அறப்பணிகளும் தொடர்கிறது
மண்ணுக்குப் பெருமையும்
விண்ணுக்கு மகிமையும்
கொடையாக வழங்கிய
வள்ளலின் தேர்ப் பவனி – இன்றும்
கண்ணுக்குள்ளோடுது
நெஞ்சம் ஆறுதா
துயர் ஏறுதா
அறிகிலேன் அந்தோனியாரே
மண்ணகம் மெய்யடங்கி
விண் அகம் புறப்படலை
மரணமென்பார்
கவலை பொங்க
கண்ணில் நீர் வடிய
இறந்த நாளை
எண்ணி உருகுவதே
இயல்பு நிலை
மண்ணிலே பல
அற்புதம் செய்த மாமுனி – உலகில்
மறையும் போதும்
கண்ணிலேதெரியா – வீரியக்
காவியம் படைத்தார்
எண்ணிப் பார்க்கவே
எந்தன் நெஞ்சம்
இன்றும் வியக்கிறது
இறப்பு என்பது முடிவல்ல
இன்னோர் கடப்பாக
இருப்பதே நிஜம் என்பதை
உலகிற்கு உணர்த்தவே – தான்
மறைந்த நாளை
மகிழ்விழாவாக்கும்
அற்புதம் படைத்தார்
எனவே தான்
புனிதர் மறைந்த( 13.06.1231 )
அன்நாளை நாம்
பெருவிழாவாக திருவிழாவாக
தேர்ப்பவனிதரும் ஒரே ஒரு
விழாவாகக் கொண்டாடுகின்றோம்
மரித்த அவர் அசையா உடல்
மரிக்கா அவர் ஆன்மா
நிலத்தில் நீரில் காற்றில் கடலில்
எங்கும் பரந்து விரிந்து – அவரை
நேசிக்கும் வாசிக்கும் சுவாசிக்கும்
உயிர்களிடத்து
சங்கமமாகி – இன்றும்
சந்தோஷம் கொடுத்து
வருவதாகவே நான் நம்புகிறேன்
உண்மை பேசி
உண்மைக்காக வாழ்ந்து
உண்மையாக மனிதர்களை நேசித்து
உண்மையின் பொருட்டு
உயர்குடி உல்லாசங்கள்
துறந்த காரணத்தால்
உண்மையே உண்மையாக
உண்மையின் உயர்வை
உலகிற்கு உணர்த்த
உயர்ந்தோனிற்கு
மறையாப் பொருளாய்
மங்கா ஒளியாம்
மா புகழ் நாவை
மகுடமாய் அளித்து
மகிழ்ந்து கொண்டது
பாவிகள் இடத்தும்
பக்தர்களிடத்தும்
பாமரரிடத்தும்
பண்டிதரிடத்தும்
பற்பல அற்புதம் வழங்கிய
கோடி அற்புதர்
நம்பிக்கை வரமும்
தும்பிக்கை பலமும்
தொடர்ந்து கொடுக்கும்
தூய மாமுனி வாழ்வு
நம்மோடு கலக்க – அவர்
பண்புகள் பணிகள்
நம்முள் தழைக்க
அன்னாளை பொன்னாளாக
தாயகத்திலும் புலத்திலும்
ஆனந்தமாகக் கொண்டாடும்
இன்நாட்களில்
புனிதர் வாழ்வு
புடமாய்க் கூறுவதென்ன ?
உடல்கள் மறையலாம்
அழியலாம் அழிக்கப்படலாம்
உண்மை நிறைந்த
உயரிய பணிகள்
உண்மைக்கான – உயர்
உயிர்த்தியாகங்கள் – என்றும்
இறவா வாழ்வாக
இயக்கம் கொண்டே – இருக்கும்
என்பதன் சாட்சி
அந்தோனியார்
அவரால் நாம் வாழ
அவரோடு நாம் வாழ
அவர் போல் நாம் வாழ
இன்நாளில்
உறுதி பூணுவோம்
ஊரவன்.